செயல்பாடு 1 – உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளித்தல்.
கற்றல் விளைவு :
படித்தவற்றைப் பற்றிச் சிந்தனை செய்து வினாக்கள் எழுப்பிப் புரிதலை மேம்படுத்திக்கொள்ளல்.
கற்பித்தல் செயல்பாடு :
அறிமுகம்:
உரைப்பத்தியைப் படித்துப் புரிந்துகொள்ளுதல், அதன் மையக்கருத்தை அறிதல், அதிலுள்ள புதிய சொற்களின் பொருளைக் கண்டறிதல், பத்தியின் தொடர் அமைப்பைத் தெரிந்து கொள்ளுதல் ஆகிய திறன்களைப் பின்வரும் எடுத்துக்காட்டின் உதவியோடு பெறுவோம்.
உடலில் உறுதி கொண்டவரே, உலகில் மகிழ்ச்சி உடையவராவார். உடல் உறுதியற்ற நோயாளருக்கு வாழும் இடமும் செல்வமும் இனிய வாழ்வினைத் தருவதில்லை. சுத்தம் நிறைந்துள்ள எல்லா இடங்களிலும் சுகம் உண்டு. நாள்தோறும் நீங்கள் தூய்மையைப் போற்றி பாதுகாத்தால் நீட்டித்த வாழ்நாளைப் பெறலாம். காலையிலும் மாலையிலும் நடைப்பயிற்சி மேற்கொண்டு நல்ல காற்றைச் சுவாசித்து வருவோரை நோய் அணுகாது அவர் உயிரைக் கவர எமனும் அணுக மாட்டான்.
கொடுக்கப்பட்டுள்ள பத்தியை முதலில் நன்கு பிழையின்றிப் படித்துப் பார்க்க வேண்டும். அடுத்து எப்படிப்பட்ட வினாக்கள் வினவப்பட்டுள்ளன என்று சிந்தித்து வினாக்களுக்கு விடை எழுதவேண்டும்.
மதிப்பீட்டுச் செயல்பாடு:1
உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.
ஏறுதழுவுதல் என்பது தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றது. அது மாடு பிடித்தல், மாடு அணைதல், மாடு விடுதல், மஞ்சுவிரட்டு, வேலி மஞ்சுவிரட்டு, எருதுகட்டி, காளைவிரட்டு, ஏறு விடுதல், சல்லிக்கட்டு எனப்பல பெயர்களில் அழைக்கப்படுகின்றது. சல்லிக்கட்டு பேச்சுவழக்கில் திரிபுற்று, ஜல்லிக்கட்டு என்றாகியது. சல்லி என்பது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தைக் குறிக்கும். புளியங் கொம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணிவிக்கும் வழக்கம் தற்போதும் உள்ளது. அக்காலத்தில் புழங்கிக்கொண்டிருந்த சல்லி நாணயங்களைத் துணியில் முடிந்து மாட்டின் கொம்புகளில் கட்டும் பழக்கமும் இருந்தது. மாட்டைத் தழுவும் வீரருக்கு அந்தப் பணமுடிப்புச் சொந்தமாகும்.
வினாக்கள்
1. கொடுக்கப்பட்டுள்ள சொற்களைக் கொண்டு தொடர் அமைத்து எழுதுக.
1. வளையம் – புளியங் கொம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணிவிக்கும் வழக்கம் தற்போதும் உள்ளது.
2. சல்லி நாணயம் – அக்காலத்தில் புழங்கிக்கொண்டிருந்த சல்லி நாணயங்களைத் துணியில் முடிந்து மாட்டின் கொம்புகளில் கட்டும் பழக்கமும் இருந்தது.
3. மஞ்சுவிரட்டு – ஏறுதழுவுதல் என்பது மஞ்சுவிரட்டு என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.
4. பணமுடிப்பு – மாட்டைத் தழுவும் வீரருக்குப் பணமுடிப்புச் சொந்தமாகும்.
5. புழங்கிக்கொண்டிருந்த – அக்காலத்தில் புழங்கிக்கொண்டிருந்த சல்லி நாணயங்களைத் துணியில் முடிந்து மாட்டின் கொம்புகளில் கட்டும் பழக்கமும் இருந்தது. மாட்டைத் தழுவும் வீரருக்கு அந்தப் பணமுடிப்புச் சொந்தமாகும்.
2. சரியா? தவறா? என எழுதுக.
1. புளியங்கொம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணிவிக்கும் பழக்கம் தற்போதும் உள்ளது – சரி
2. மாட்டைத் தழுவும் வீரருக்கு அந்தப் பணமுடிப்பு சொந்தமில்லை. – தவறு
3. ஏறுதழுவுதல் குறித்து உங்களுக்குத் தெரிந்த செய்திகளை ஐந்து வரிகள் எழுதுக.
• ஏறு தழுவுதல் சங்ககால மக்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகும்
•ஏறு தழுவுதல் தற்பொழுது சல்லிக்கட்டு என்ற பெயரில் வழங்கப்படுகிறது
•சல்லிக்கட்டு தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக நடைபெறுகிறது.
• சல்லி என்பது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தைக் குறிக்கும்.
• சல்லி நாணயங்களைத் துணியில் முடிந்து மாட்டின் கொம்புகளில் கட்டும் பழக்கமும் இருந்தது. மாட்டைத் தழுவும் வீரருக்கு அந்தப் பணமுடிப்புச் சொந்தமாகும்.
4. கோடிட்ட இடத்தை நிரப்புக.
கொடுக்கப்பட்டுள்ள பத்திக்கு ஏற்ற தலைப்பு ஏறு தழுவுதல்
5. ஏறுதழுவுதலுக்கு வழங்கும் வெவ்வேறு பெயர்களை எழுதுக.
மாடு பிடித்தல், மாடு அணைதல், மாடு விடுதல், மஞ்சுவிரட்டு, வேலி மஞ்சுவிரட்டு, எருதுகட்டி, காளைவிரட்டு, ஏறு விடுதல், சல்லிக்கட்டு எனப்பல பெயர்களில் அழைக்கப்படுகின்றது